கல்விக் கடன்களை கட்டாயம் நமது வங்கிகள் தர வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துகிறது. தற்போதைய பொருளாதார சூழலில் கடன்கள் கிடைப்பது எளிதானதாகவே இருந்தாலும் கல்விக் கடன்களை மாணவர்கள் பெறுவது இன்னமும் கூட முழுமையாக எளிதானதாக இல்லை என்றே கூறலாம்.
தரமான கல்விக்காக எவ்வளவு செலவானாலும் சரி நமது குழந்தைகள் நல்ல கல்வி நிறுவனத்தில் தான் படிக்க வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.
ஸ்காலர்ஷிப் கிடைக்காதவர்கள் கல்விக் கடன்களை பெரிதும் நம்புகிறார்கள். தனியார் வங்கிகளும் கல்விக் கடனைத் தருவதாகக் கூறினாலும் பொதுவாக பொதுத் துறை வங்கிகள் தான் இவற்றை அதிகம் தருகின்றன. பொதுவாக தொழிற்படிப்புகள் படிப்பவர் தான் இவற்றை நம்பியிருக்கிறார்கள். திருப்பி அடைக்கத் தொடங்குவது ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு அப்புறம் என்பது தான் இதன் மிகப் பெரிய வசதி.
படிப்பு முடித்த ஒரு ஆண்டுக்கு பின்பாகவோ அல்லது வேலை கிடைத்த 6 மாதத்திற்கு அப்புறமாகவோ கடனை அடைக்கத் தொடங்கலாம் என்றே பொதுவாக வரைமுறைகள் உள்ளன. படிப்பின்போது வட்டியை மட்டும் செலுத்தினால் போதும். படிப்பு முடித்தபின் இ.எம்.ஐ. எனப்படும் அசலும் வட்டியுமாக திரும்ப அடைக்கத் தொடங்குதல் ஆரம்பிக்கிறது. படிப்பின் போதே இ.எம்.ஐ. செலுத்த தயாராக இருந்தால் வட்டியில் தள்ளுபடி கிடைக்கிறது. இந்த நியதிகள் வங்கிக்கு வங்கி சற்றே மாறுபடலாம்.
கல்விக் கடன்கள் பொதுவாக பர்சனல் லோன் எனப்படும் கடன்களை விட குறைந்த வட்டியை கொண்டுள்ளன. ஆனாலும் வீட்டு கடன்களுக்கான வட்டியை விட கொஞ்சம் கூடுதலானவை. பிக்சட் வட்டி மற்றும் புளோட்டிங் வட்டி என்னும் இரு முறைகளுக்கிடையேயான வித்தியாசம் ஒரு சதவீதம் தான் என்றால் பிக்சட் வட்டியை தேர்வு செய்வதே புத்திசாலித்தனமானது. 5 முதல் 7 ஆண்டுகால இடைவெளியை கொண்டுள்ள கல்விக்கடன்களில் இதுவே அறிவுறுத்தப்படுகிறது.
பிக்சட் வட்டியை நிர்ணயிப்பதில் பல வங்கிகள் குழப்பமான நடைமுறையைக் கொண்டுள்ளன என்பதால் இதில் கவனமாக இருக்க வேண்டும். மாணவிகளுக்கான கல்விக்கடன்களில் சிறப்புத் திட்டங்களை பல வங்கிகள் கொண்டிருக்கின்றன. ஒரு சதவீதம் குறைவான கடன்களை பல வங்கிகள் பெண் கல்விக்குத் தருகின்றன என்பதால் நன்கு விசாரித்து இதை அறிந்து கொள்ளவும். பிராசசிங் கட்டணம் என்ற பெயரில் வங்கிகள் கடனை தருவதற்கு முன்பாகவே கூறத் தொடங்கினால் அதை தள்ளுபடி செய்ய முயற்சிக்க வேண்டும்.
சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற பெஞ்ச் கல்விக் கடன் தொடர்பாக முக்கியமான தீர்ப்பு ஒன்றை தந்துள்ளது. கல்விக் கடன் என்பது ஒருவரின் அடிப்படை உரிமையல்ல என்று. எனவே கல்விக் கடன்பெற நீங்கள் தகுதியானவர் என்றால் அதை வங்கிகள் கட்டாயம் கொடுத்திடும் என்பதில் சந்தேகமில்லை.